மதுரை எய்ம்ஸ்.. தென் தமிழக மக்களுக்கு பாஜக வைக்கும் "ஐஸ்"?
தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்?
மதுரை: எதிர்பார்த்த ஒன்றுதான்.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது!!
பொதுவாக 2 வகை அரசியல் உள்ளது. ஒன்று, வரப்போகிற தேர்தலுக்கு அடிபோடுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வது. இரண்டு, தேர்தலில் தோற்றபிறகு, அதிலிருந்து மீண்டு வந்து, அடுத்த தேர்தலுக்கு அடி போடுவது!! இந்த இரண்டைதான் சுதந்திரம் வாங்கியதிலிருந்து அரசியல் தலைவர்கள் நமக்கு செய்து கொண்டிருக்கும் மாபெரும் செயல்கள்!!
இந்த மாதத்தில் நம் நாட்டில் நடந்ததே இந்த 2 செயல்களுக்கும் உதாரணமாக கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கும் சமயத்தில், தன் வேலையை காட்டியது பாஜக. வேற காலகட்டத்துக்கு நாம் போய்விட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்து கொண்டே வந்தது. தேர்தல் முடிந்தது... மீண்டும் விலை உயர்ந்தது.
வரும்... ஆனா வராது
ஆனால் நம் சாமான்யன் விலை உயர்ந்ததையும் பார்த்தான், விலை குறைந்ததையும் பார்த்தான், காரணத்தையும் முன்பும் அறிந்தான், பின்பும் அறிந்தான். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பும் கூட பல கேள்விகளை எழுப்பியுள்ளது.. "வரும்... ஆனா வரவே வராது" என்று சொல்லப்பட்டதுதான் எய்ம்ஸ். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முதலில் இடத்தை தேர்வு செய்வதற்கே படாத பாடு பட்டு, ஒருவழியாக 4 வருடம் கழித்து அந்த இடம் மதுரை என தேர்வானது.
10 பைசா கூட இல்லை
பிறகு மருத்துவமனை அமைய 2015-ம் ஆம் ஆண்டே இதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் மாதம் இந்தியா டுடே இதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பெற்ற தகவல்களில், மதுரையில் மருத்துவமனைக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதலே வழங்கவில்லை என தெரியவந்தது. அதாவது 10 பைசா கூட ஆஸ்பத்திரி கட்ட ஒதுக்கீடே செய்யவில்லை என்பது அம்பலமானது.
எப்போது தொடங்கப்படும்?
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் எப்போதுதான் எய்ம்ஸ் அமைய மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்? எப்போது பணி தொடங்கப்படும்? என்று கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு வழக்கை போட்டார். இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து, தமிழக சுகாதாரத்துறைக்கு பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்பினார்கள்.
ஒப்புதலே இல்லை
அதற்கு "மத்திய அமைச்சகத்தில் இருந்து வழங்கப்படும் ஒப்புதலை விரைவில் அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்கு பிறகுதான் அதற்கான பணிகள் தொடங்கும். இருப்பினும் மருத்துவமனை நடைமுறைக்கு வர 2 ஆண்டுகள் குறையாமல் ஆகும்'என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டது.
13 எய்ம்ஸ் மருத்துவமனை
அதாவது இப்போது கட்ட ஆரம்பித்தாலும் ஆஸ்பத்திரி நமக்கு கிடைக்க 2 வருஷம் ஆகும் என்பதுதான் அரசு தரப்பில் அன்று சொல்லப்பட்ட யதார்த்தம். இந்த நிலையில்தான் இப்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு, நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். தமிழகத்தில் எய்ம்ஸ் என்று கூறி அது முடிந்து 4 ஆண்டுளுக்குப் பிறகுதான் ஒப்புதலே வந்துள்ளது.
2 வருடங்கள் ஆகும்
இனி அடிக்கல் நாட்டுவது எப்போதோ, கட்டி முடிக்கப்படுவது எந்த வருட தேர்தலோ என்று தெரியவில்லை. இப்போதைய ஒப்புதல் என்பது மிகவும் தாமதமான முடிவே. அனுமதியே இப்போதுதான் என்றால், இனி அதை செயல்படுத்தி மேற்கொண்டு பணிகளை செய்ய பல மாதங்கள் ஆகும். அல்லது தமிழக அரசு ஏற்கனவே சொன்னபடி 2 வருடங்களாவது ஆகும்.
ரேபரேலி
உத்தரவாதம் தந்து நான்கரை ஆண்டுகள் இதை அறிவிக்காமல், கடைசி நான்கு மாதங்கள் இருக்கும்போது, அதுவும் வரப்போகிற தேர்தலுக்காக இந்த அனுமதி தந்திருப்பதை தமிழக மக்களை குறிப்பாக தென் தமிழகத்திற்கு ஐஸ் வைப்பது போலத்தான் பார்க்க வேண்டியுள்ளது. நான்கரை வருஷமாக போகாத ரேபரேலி தொகுதிக்கு ஓடிச்சென்றாரே மோடி, அதுபோலதான் இந்த அறிவிப்பு என்பதும்.
வேகம் பிடிக்குமா?
எனவேதான் இந்த அறிவிப்பை முழுமையாக கொண்டாட முடியாத மன நிலை தென் தமிழக மக்களுக்கு வருகிறது. பார்ப்போம், இந்த ஒப்புதலைத் தொடர்ந்தாவது வேகம் பிடிக்குமா நடவடிக்கைகள், மருத்துவமனை உண்மையிலேயே எழும்பி நிற்குமா என்பதை.