ஒரே டிராக்கில் எதிரெதிரே வந்து திகிலூட்டிய ரயில்கள்.. அடுத்து நடந்தது என்ன?
Recommended Video
மதுரை: மதுரை திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரு ரயில்கள் வந்த விவகாரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை 5.15 மணிக்கு செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வந்தது. இதனால் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கோளாறு
அப்போது கொல்லத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையிலிருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயிலும் சிக்னல் கோளாறால் நிறுத்தப்பட்டிருந்தது.
நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள்
பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், கொல்லம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் மதுரை புறப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையிலிருந்து மதுரை வரும் பாசஞ்சர் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
குறைந்த வேகத்தில்
நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் ரயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு திருமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயத்தில், திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்ல வேண்டிய பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
விபத்து தவிர்ப்பு
இந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்த போது கள்ளிக்குடியிலிருந்து பயணிகள் ரயில் வந்து கொண்டிருப்பது ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே கேட் அருகே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா, இயக்க கட்டுப்பாட்டாளர் முருகானந்தம் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டார்.