மதுரை - தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு... மதுரை ஹைகோர்ட் அதிரடி
மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக் கட்டண குறைப்பை வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை - தூத்துக்குடி இடையிலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுங்கக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தனி நீதிபதி, அவ்வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்த உத்தரவிட்டார்.
இதற்கு தடை விதிக்கக்கோரி, எளியார்பத்தியில் உள்ள சுங்கச் சாவடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் சாலையை சீரமைக்கும் வரை கட்டண குறைப்பு தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.