300 ஆண்டுகள் பழமையான சாவடி.. சொந்த செலவில் 6 அடிக்கு உயர்த்திய மக்கள்!
Recommended Video
மதுரை: மதுரையில் 300 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தை சொந்த செலவில், ஜாக்கி போட்டு 6 அடிக்கு உயர்த்தியுள்ளனர் பொதுமக்கள்.
மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாவடி ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சாலையின் உயரத்தை விட மிகவும் பள்ளத்தில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாவடிக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலை உள்ளது.
எனவே சாவடி கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் தரை தளத்தில் இருந்து ஆறடி உயரத்துக்கு உயர்த்த பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த பகுதி மக்கள் 25 லட்சம் நிதி திரட்டினர். நிதி திரட்டப்பட்டதும் பீகார் மாநிலத்திலிருந்து கட்டிடங்களை உயர்த்தும் பணியைச் செய்துவரும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டனர் ஊர் பொதுமக்கள்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு
அதனைத் தொடர்ந்து 15 தொழிலாளர்கள் கடந்த 60 நாட்களுக்கு முன்பு பழங்காநத்தம் பகுதியில் சாவடி இருக்கக்கூடிய பகுதிக்கு வந்து தங்களது பணியை தொடங்கினர். ஜாக்கிகள் மூலம் மிகவும் கவனமாக கட்டிடத்தை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று கட்டிடம் 6 அடி உயரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஜாக்கிகள் மூலம் சாவடியை உயர்த்தும் பணியை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர். தங்களது பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாவடியை எப்படியாவது புதுப்பிக்க வேண்டும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று தங்களது சொந்த பணத்தில் தங்களின் பழமை வாய்ந்த கட்டிடத்தை விட்டு கொடுக்காமல் சீரமைத்து வரும் மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.