மதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்
மதுரை: நான்கு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தை கிருமி நாசினி கொண்டு சுகாதாரப்பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி சென்ற சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட பத்து பேரை இரண்டு கட்டமாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இரண்டாம் கட்ட விசாரணையானது காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை, வெயில் முத்து ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கும் போது சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக விசாரணையை முடித்தனர்.
கொரோனா காலத்தில் திருச்சியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - 1098 இல் புகார் கொடுங்க
அந்த இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிபிஐ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சிபிஐ அதிகாரிகள் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையிலும் கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.