ஜூன் 12 நடைபெறும் 596 கி.மீ மனித சங்கிலி போராட்டம்.. அனைத்து தரப்பினரும் பங்கேற்க வைகோ அழைப்பு
மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள பிரமாண்ட மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்து பங்கேற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், எதிர்காலத்தை நாசமாக்கும் பேராபத்து கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால், அப்பகுதி முழுவதும் அழிந்துவிடும்.
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், வரும் 12-ம் தேதி விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரையில் நடைபெற உள்ள, 596 கி.மீ பிரமாண்ட மனித சங்கிலியில் மதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்கின்றன என்றார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தாம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும் பேசிய வைகோ
பொதுமக்களும் இந்த போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மக்கள் விரும்பாத திட்டங்களையும் தமிழகத்தை அழிக்கும் நோக்கத்துடனும் செயல்படும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் இந்த செயல்களுக்கு எச்சரிக்கை மணி இது என்பதை பறைசாற்றும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், வணிக பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் மனித சங்கிலி போராட்டதில் பங்கேற்க வேண்டும்.
நம் மண்ணை காக்க நடைபெறும் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் என்னும் பேராபத்தை தடுக்காவிட்டால், வருங்கால சந்ததிகள் மாபெரும் இன்னல்களுக்கு ஆளாவார்கள்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களை சமாதானப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகிறார். 8 வழிச்சாலை திட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக தனது கொள்கையை விட்டு தந்து சமரசம் செய்து கொள்கிறார். ஆனால் அவரது சமரசத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்
கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூறியுள்ளார்