கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்ஐவி பரவுவதை தடுக்க நடவடிக்கை: ராஜாஜி மருத்துவமனை டீன் பேட்டி
மதுரை: ரத்தம் ஏற்றியபோது, எச்ஐவி பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளிக்க 9 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தைக்கு நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ரத்தம், அவருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, சிறப்பு சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று மருத்துவமனை, டீன் சண்முகசுந்தரம்: 9 மூத்த மருத்துவர்களை கொண்ட குழு அமைத்துள்ளோம். விருதுநகரில் செய்யப்பட்டுள்ள ரத்த பரிசோதனைகள் எல்லாம் திரும்பவும் செய்து, பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எச்ஐவி வைரஸ் எந்த அளவுக்கு வீரியமாக உள்ளது என்பதை அறிய மேலும் பல புதிய பரிசோதனைகளை, விரிவான பரிசோதனைகளை இங்கு மேற்கொண்டு அதற்குரிய மருத்துவம் செய்யப்படும்.
எச்ஐவிக்கு மூன்று வகை மருந்துகளை கொடுக்கிறோம். இதன் மூலமாக அவர் உடல் நிலை சிறப்பாக இருக்கும். 2019 ஆம் தேதி ஜனவரி 30 ஆம் தேதி குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ள எதிர்பார்க்கக்கூடிய காலகட்டமாகும். அதற்கு முன்பாகவும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
எச்ஐவி பாதிப்பு ஏற்படாமலிருக்க பிறந்ததும் 42 நாட்கள் மருந்து கொடுக்க வேண்டும். அதன் மூலமாக குழந்தைக்கு நோய் பரவுவதை தடுக்கலாம். எச்ஐவி பாதிக்கப்பட்ட தாய்க்கு இதுபோன்ற மருந்து கொடுத்து இதற்கு முன்பும் பல குழந்தைகளை காப்பாற்றி உள்ளோம். குழந்தைக்கு 99% எச்ஐவி நோய் பரவுவதற்கு வாய்ப்பு கிடையாது.
குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போது எச்ஐவி பாதிப்பு பரவாது. பிறக்கும்போது தான் பரவும் வாய்ப்பு உண்டு. பிரசவ வலி ஏற்பட்ட பிறகுதான் குழந்தைக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம். குழந்தையை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப் போகிறோமா, நார்மல் டெலிவரியா என்பதெல்லாம் பிறகுதான் முடிவு செய்யப்படும்.