நடுராத்திரி.. பெரிய கல்லை தூக்கி போட்டு நூதன கொள்ளை.. உயிருக்கும் ஆபத்து.. இந்த வீடியோவை பாருங்க
மதுரையில் நடுரோட்டில் கற்களை போட்டு கொள்ளையடிப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
மதுரை: நடுராத்திரி.. நடுரோடு.. பெரிய கல்லை தூக்கி போட்டு நூதன கொள்ளை அடித்ததுடன், ஒரு உயிரையே அநியாயமாக பறித்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை திருநகரை அடுத்த பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பாஸ்கர் என்பவர். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் லேப் டெக்னீசியனாக உள்ளார். மனைவி ஸ்ரீதேவி, தனியார் பள்ளி டீச்சராக வேலை பார்க்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணி இருக்கும். பாஸ்கர் வேலைக்கு போய்விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையில் ஒரு பெரிய கல்லில் தெரியாமல் மோதி கீழே விழுந்து விட்டார். அந்த பக்கம் சென்றவர்கள், பாஸ்கரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
ஒளிந்து கொள்கிறார்
இதையடுத்து, போலீஸார், காவல்துறை பூங்கா பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தார்கள். அதில் நள்ளிரவு 1 மணிபோல, ஒருவர் நடு ரோட்டில் ஒரு பெரிய கல்லை வைத்துவிட்டு, பக்கத்தில் ஒளிந்து கொண்டு படுத்து கொள்கிறார்.
விரட்டி அடிக்கிறார்
அந்த பக்கம் நிறைய வண்டிகள் வருகின்றன. கல்லை பார்த்ததும் ஒதுங்கி செல்கின்றன. யாரும் தூர எடுத்து போட முயலவில்லை. ஒரே ஒருவர் மட்டும் கல்லை பார்த்ததும், வண்டியை விட்டு கீழே இறங்கி அதை அகற்ற முயல்கிறார். ஆனால் கல்லை போட்ட நபரோ, ஓடிவந்து அவரை விரட்டி அடிக்கிறார். அதனால் அந்நபர் கல்லை அகற்றாமலேயே கிளம்பி சென்றுவிடுகிறார்.
செல்போன்
அந்த நேரத்தில்தான் பைக்கில் பாஸ்கரன் வருகிறார். கல்லில் அடிபட்டு மோதி கீழே விழுகிறார். அப்போது ஒளிந்திருக்கும் நபர் ஓடிச்சென்று, பாஸ்கரனின் பாக்கெட்டில் உள்ள பணம், செல்போனை திருடி கொண்டு ஓடிவிடுகிறார்.
அதிர்ச்சி
அடிபட்ட பாஸ்கரனுக்கு ரத்தம் வழிந்து ஓடுகிறது. 20 நிமிடமாக உயிருக்கு போராடுகிறார். நிறைய பேர் பாஸ்கரனை கடந்து சென்றும் யாரும் உடனடியாக உதவிக்கு வரவில்லை. பின்னர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன்பின்னரே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பாஸ்கரனுக்கு உயிர் பிரிந்தது. இந்த சிசிடிவி காட்சியை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்.
ராஜா கைது
உடனடியாக கொள்ளையன் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். விசாரணையில் மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கொள்ளையன் ராஜா என்பது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்தனர். இந்த ராஜா இதே போல் நிறைய முறை இந்த டெக்னிக்கை பயன்படுத்தி கொள்ளையை செய்தது மேலும் தெரிய வந்திருக்கிறது.