திண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ
Recommended Video
மதுரை: திண்டுக்கல் அருகே இளம்பெண் ஒருவரை அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள கிழக்கு காப்பிலியபட்டியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கும் , சரண்யா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் சற்குணத்துக்கு, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவருடன் கடந்த 6 வருடங்களாக முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சரண்யா சற்குணத்துடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சற்குணம் ஈஸ்வரியை தனது வீட்டுக்கே அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
இதனால், சமீபத்தில் சரண்யாவுக்கும், சற்குணத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஈஸ்வரியுடன் சேர்ந்து, தனது மனைவியை அடித்து உடைத்துள்ளார் சற்குணம். மேலும், சரண்யா மீது ஏறி உட்கார்ந்து அவரது கழுத்தை நெரித்துள்ளார்.
இதை பக்கத்து வீட்டு இளைஞர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இளைஞர் வீடியோ எடுப்பதை பார்த்ததும், சற்குணம் தனது மனைவியை தாக்குவதை நிறுத்தியுள்ளார். வீடியோ எடுத்த இளைஞர் அதை சமூக வலைத்தளங்கள் வழியாக பரவவிட்டதால், அந்த வீடியோ இப்போது வைரலாகிவிட்டது.
இதனிடையே, பலத்த காயமடைந்த சரண்யா, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.