புழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்
மதுரை: மதுரை மாவட்டம் தத்தனேரியில் தமிழக ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட அரிசியில் கற்களும், மணலும், புழுக்களும் பூச்சிகளும் இருப்பதாக 3 குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது மனக்குமுறலை வீடியோவாக எடுத்து ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பால் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பால், காய்கறி, மருந்து, உணவகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
கட்டடத் தொழில் உள்ளிட்ட எந்த தொழில்களும் நடைபெறவில்லை. இதனால் ஏழை மக்கள் வேலையில்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஊதியமும் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அரிசி குறித்த புகார்
இதை மனதில் வைத்துக் கொண்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிதியுதவியும் இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி குறித்து ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புழுக்கள்
இதுகுறித்து ரேஷன் கடை வாடிக்கையாளர் வீடியோவில் கூறுகையில் ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட அரிசி, சமைத்து சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறது. இதில் ஏராளமான கற்கள், மணல், புழுக்கள், பூச்சிகள் கொண்டதாக இருக்கிறது. இதை நான் எப்படி சமைத்து சாப்பிடுவது?
அரிசி
எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களை பாருங்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக நான் உயிர் வாழ வேண்டும். இந்த அரிசி மதுரை மாவட்டம் தத்தனேரி, அருங்காட்சிபுரத்தில் உள்ள 5ஆம் எண் கொண்ட ரேஷன் கடையில்தான் இதுபோன்ற அரிசியை வாங்கினேன். என்னுடன் ஏராளமானோர் இந்த அரிசியை வாங்கினார்கள். ஆனாலும் யாரும் புகார் கூற முன்வரவில்லை.
அரிசியில் சமைத்தல்
ஆனால் இன்னும் 15 நாட்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அப்படியிருக்கையில் இந்த அரிசியில் சமைத்து என் பிள்ளைகளுக்கு எப்படி கொடுப்பேன். அந்த அரிசியை நீங்களே பாருங்கள். இந்த வீடியோவை பார்ப்போர் 4 பேருக்கு பகிர்ந்து விடுங்கள். இந்த அரிசி குறித்த புகாரை யாரிடம் கூற வேண்டும் என்பது கூட எனக்கு தெரியவில்லை. நான் படிக்காதவன் என அந்த தந்தை தனது மனக்குமுறலை கூறியுள்ளார்.
வேலைக்கு செல்லாமல்
கொரோனா பாதிப்பால் வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவிப்போருக்கு உதவும் நல்ல நோக்கில் தமிழக அரசு நிவாரணத் தொகையையும் ரேஷன் பொருட்களையும் கொடுத்து வருகிறது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த உணவு பொருட்கள் தரமானதா என்பதை சோதிக்க மறந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்த அரிசியை ரேஷன் கடை ஊழியர்களோ அரசு அதிகாரிகளோ சமைத்து சாப்பிட முடியுமா என்பதை உணராமல் அலட்சியமாக இருந்தது ஏன்.
தரமான பொருட்கள்
இலவசம் தானே என இப்படி புழுத்து போன அரிசியை கொடுப்பதால் என்ன பயன் இருக்கிறது. விழித்திரு வீட்டுக்குள்ளேயே இரு என்ற அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் இன்னும் சில நோய்கள் ஏற்படும். சரி சாப்பிடாமல் இருந்தால் பட்டினியால் எத்தனை உயிர்கள் பறிபோகும் என்பதை அதிகாரிகள் சிந்திக்க மறந்துவிட்டனர். இனியாவது இதை சம்பந்தபட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.