மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
மதுரை: மதுரையில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியிருந்ததால், 2 மாடிக் கட்டடம் திடீரென ஒருபுறமாக சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்த 2 பேர் உடனடியாக வெளியேறினார்கள். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
சாய்ந்து நிற்கும் கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
சாய்ந்த 2 மாடி கட்டிடம்
மதுரை தெற்கு வெளிவீதி காஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது வீட்டின் அருகே, அவருக்கு சொந்தமான 2 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த 2 மாடி ஒரு புறம் மட்டும் லேசாக பூமியில் இறங்கியது. அதன் ஒரு பகுதி பக்கத்து வீட்டின் மீது சாய்ந்து நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள் சேதம்
அப்போது அந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணும், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவர் ஒருவர் மட்டும் தான் இருந்தனர். திடீரென கட்டிடம் சரியும் சத்தம் கேட்டு அவர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேறினார்கள். வீடு சாய்ந்ததில் வீட்டின் முன்புறம் உள்ள பால்கனி, 2 மாடியில் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு இடிந்து கீழே விழுந்தன. இதனால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
போக்குவரத்து தடை
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தும் தெற்குவாசல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லவும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர் மழையால் வீட்டின் கட்டுமானம் பலம் இழந்ததால் வீடு சரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும் என்று உரிமையாளர் ஜெயபாலுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
பெரும் விபத்து தவிப்பு
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ஜெயபால் கூறுகையில், தொடர் மழையால் வீட்டின் முன்பு கடந்த 15 நாட்களாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி கீழே இறங்கியது. யார் உயிருக்கும், உடமைக்கும் எந்த சேதமம் இல்லை. சரிந்த கட்டிடத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தொடங்கி உள்ளோம் என்றார். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அந்த 2 மாடி கட்டிடம் மட்டும் முழுமையாக இடிந்து விழுந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும்.