என்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. "குப்பு"ன்னு வேர்க்குதே கேட்டாலே!
ஏசி சண்முகம் 6 சீட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்
மதுரை: "மொத்தம் 6 சீட் வேணும்.. எங்கள் கோரிக்கையை அதிமுக தலைமையிடம் எடுத்து வைத்துள்ளோம்" என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக இதை பற்றி இன்னும் எதுவுமே சொல்லவில்லை.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகின்றன.. அதனால், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன...
வெளிப்படையாக கூட்டணி பேச்சுவார்த்தை அறிவிக்கப்படவில்லை என்றாலும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும், இப்போதுள்ள கட்சிகள் அந்தந்த கூட்டணியிலேயே மீண்டும் ஐக்கியமாகி தேர்தலை சந்திக்கவும் முயன்று வருகின்றன.
கூட்டணி
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.. கடந்த எம்பி தேர்தலின்போது, ஏகப்பட்ட சோகங்களையும் ட்விஸ்ட்களையும் கண்ணீருடன் கடந்து வந்தது புதிய நீதிக்கட்சி.. இப்போது மறுபடியும் அக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு சீட்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது..
ஏர்போர்ட்
இந்நிலையில், தங்களுக்கு 6 சீட்டுகள் வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் ஏசி சண்முகம்.... மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம் சொன்னதாவது: செக்கிழுத்த செம்மல், சுதந்தர போராட்ட வீரர், அய்யா வஉசி வெண்கல சிலை திறப்பு விழா போடியில் நடைபெற இருக்கிறது. என்னுடைய தலைமையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிலையை திறந்து வைக்கிறார். பல துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது... ஆயிரம் கிராமப்புற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பை எடப்பாடியார் அரசு ஏற்படுத்தி தந்து இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
விவசாயக் கடன் 15 ஆயிரம் கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கி அதிக இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நீதிக் கட்சி அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. மீண்டும் எடப்படியார் ஆட்சி அமையும்... புதிய நீதிக் கட்சி ஆறு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணித் தலைமையிடம் கேட்டு இருக்கிறது" என்றார்.
ஜிகே வாசன்
அதிமுக 234 தொகுதிகளில், 170 இடங்களில் அதிமுக வேட்பாளரையே களமிறக்க திட்டமிட்டுள்ளது... திமுகவை சமாளிக்க இப்படி இறங்கினால்தான் முடியும் என்ற முடிவிலும் அதிமுக உள்ளது.. அதனால் எஞ்சியுள்ள இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.. அப்படி இருக்கும்போது, ஏசி சண்முகம் கேட்டிருக்கும் 6 சீட்டுகளை அதிமுக தாராளமாக ஒதுக்குமா? அல்லது ஜிகே வாசனைபோல, ஏசி சண்முகமும் சீட் விவகாரத்தில் அதிமுகவின் முடிவிற்கே விட்டுவிடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.