நான் நல்லா இருக்கேய்யா.. நல்லா பாத்துக்கிறாக.. கஷ்டமெல்லாம் இல்லை.. பரவை முனியம்மா உற்சாகம்!
Recommended Video
மதுரை: "நான் நல்லா இருக்கேன்..ப்பா.. ஆஸ்பத்திரியில இருக்கேன்.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க" என்று உற்சாகத்துடன் சொல்கிறார் பரவை முனியம்மா!
எவ்வளவு திறமைகள் இருந்தும் வாழ்நாளெல்லாம் அறியப்படாதவர் திடீரென ஒருநாள் பார் போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவார். அந்த வகையில் பரவை முனியம்மாவையும் குறிப்பிட்டு சொல்லலாம்.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் பரவை என்ற ஊரில் இருந்து வந்துள்ளதால் பரவை முனியம்மா என்று அழைக்கப்படுகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார்.
பாடல்கள்
நல்ல குரல் வளம்.. உச்சஸ்தாயியில் நன்றாக பாடுவார்.. காமெடி நடிகையும்கூட.. பல படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதைதவிர, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல்களை பாடி அசத்தியவர். இவருக்கு சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சனைகள் இருந்து வந்தது. சில தினங்களாக இவரை பற்றின வதந்திகளும் பரவி வந்து கொண்டுள்ளன. இன்றும் அப்படி ஒரு வதந்தி பரவியது.
சிகிச்சை
ஆனால் பரவை முனியம்மாவின் உடல்நிலை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. "பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செலவுகள்
அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார். அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
ராக்கு
மருத்துவமனை தரப்பில் விளக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், முனியம்மாவே இதைபற்றி பேசி தன்னை பற்றின வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவரது மகள் ராக்கு, தன் அம்மாவை பற்றிசொல்லும்போது, "அம்மா நல்லா இருக்கிறாங்க, ஸ்கேன் எடுத்திருக்கிறார்கள்" என்று சிகிச்சை விவரங்களை தெரிவிக்கிறார்
நல்லா இருக்கேன்
பிறகு, இன்னொரு வீடியோவில், ஒருவருடன் முனியம்மா பேசுகிறார். "நான் நல்லா இருக்கேன்.. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க" என்கிறார். அப்போது அவரது குரலில் பழைய கம்பீரமும், கலகலப்பும் தென்படுகிறது. சந்தோஷமா திரும்பி வாங்காத்தா.. காத்திட்டிருக்கோம் உங்க பாட்டுக்களை கேட்க.