டெல்லி அடகில் அதிமுக! லேடியா? மோடியா? எனக்கேட்ட ஜெயலலிதாவை மறந்துட்டாங்க! கி வீரமணி விளாசல்
மதுரை: ‛‛அதிமுக ஜெயலலிதாவின் கொள்கையை மறந்து டெல்லியில் அடமானமாக மாறியுள்ளது. லேடியா? மோடியா? எனக்கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போது அதிமுகவினர் திசைமாறி செல்கின்றனர். அதிமுகவை டெல்லியில் இருந்து மீட்கும் நபர் யாரோ அவர் தலைமைக்கு வரட்டும்'' என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கூறினார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது கி வீரமணி கூறியதாவது:
விரைவில் அதிமுக பொதுச் செயலாளராவார் ஓபிஎஸ்.. தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம்.. கோவை செல்வராஜ்
8 தீர்மானங்கள்
பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும். திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவித்தல். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, உயர்நீதிமன்ற பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசியல் பின்புலமின்றி போராட்டம்
அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம். முடி திருத்த போகலாம் என பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுவது இளைஞர்களின் கோபத்த தூண்டுகிறது. வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, அக்னிபாத்திற்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடி வருகின்றனர்.
திராவிடம் தான் காரணம்
மதுரை ஆதினம் போன்றோர் ஆதீனமாக உலவ காரணம் திராவிடம் தான். மதுரை ஆதீனம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம். பட்டினபிரவேசம் என்னால் தெரியவந்தது போல சனாதானத்தில் ஆதீனம் என்றால் யார் என்பதையும் அனைவருக்கும் தெரியட்டும்.
பிரித்தாளும் பாஜக
இந்தியாவில் பாஜக எதிர்கட்சிகளை ஒன்றிணையாமல் பிரித்தாளுகிறது. தமிழகத்தில் எதிர்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும், வரக்கூடாது என்பதை திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது. 2024தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஜெயலலிதாவை மறந்த அதிமுகவினர்
அதிமுகவினர் திராவிடர் கழகம் தாய் கழகம் என்பதையும் மறந்துவிட்டார்கள். அதிமுகவின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள். அதிமுக தற்போது டெல்லியில் அடமானமாக உள்ளது. லேடியா? மோடியா? என கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போது அதிமுகவினர் திசைமாறி செல்கின்றனர். அதிமுகவை டெல்லியில் இருந்து மீட்கும் நபர் யாரோ அவர் தலைமைக்கு வரட்டும். அதிமுகவின் பொதுக்குழுவால் புதுக்குழு தான் உருவாகிறது. அதிமுக தங்களது அடமானத்தை மீட்டு தமிழ்மானம் காக்க வேண்டும். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது'' என்றார்.