வதவதன்னு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர்.. வளைத்துப் பிடித்துக் கைது
மதுரை: மதுரையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி முழுவதிலும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500ரூபாய் என பல கோடிக்கணக்கான பணத்தை வழங்கி வருகின்றனர் என புகார் நிலவுகிறது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் பல பகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவருகின்றனர் என்று சொல்கிறார்கள்.
இன்று மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி தேவதாஸ் என்பவர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்துகொண்டிருந்தபோது போலிசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனையடுத்து அவரிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான 2ஆயிரம் ரூபாய் நோட்டிகளை போலிசார் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்ததாக தேவதாஸ் உள்ளிட்ட 4நிர்வாகிகளை போலிசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் வாக்காளர்களுக்கு சரமாரியாக பண விநியோகம் செய்து வருகின்றனர். இதில் கட்சி பாகுபாடே இல்லை. மக்களும் கூட பல இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு பணம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது எங்கு போய் முடியுமோ!