"மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு இதுதான் காரணம்" அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கம்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான தாமதம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது வரை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை மற்றும் சுற்றுச் சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.
மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர!
ஜேபி நட்டா பேச்சு
இதனிடையே இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பாஜக-வின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார். இதனால் மதுரை எய்ம்ஸ் விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளாகியது.
எம்பி-க்கள் கிண்டல்
இதனைத்தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தோப்பூரில் ஆய்வு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத்தொடர்ந்து பாஜக தரப்பில் மதுரை எய்ம்ஸ்-க்கான தொடக்க பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்ததாக மட்டுமே ஜேபி நட்டா கூறியதாக விளக்கமளிக்கப்பட்டது.
ஆர்பி உதயகுமார் விளக்கம்
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை சொந்த நிதியில் கட்டினால் இவ்வளவு கால அவகாசம் தேவைப்படாது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு ஜெய்க்கா நிதியை எதிர்பார்த்ததே தாமதத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.
முதற்கட்ட பணிகள்
தொடர்ந்து, இப்போது கூட எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்று இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் பாணியில் விமர்சித்தார்கள். அது அப்படியல்ல. நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. நிதி ஒப்புதல் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இனி நாம் டெண்டர் கோரப்பட்டு அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.