எடப்பாடி வர்றாரு! கசப்பை மறந்து கைகோர்த்த மாஜிக்கள்! அடடே இப்படி ஒரு ஏற்பாடா? ஆனாலும் ஒரு குறை!
மதுரை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ஆம் தேதி மதுரைக்கு பயணம் மேற்கொள்வதோடு, மதுரையை தொடர்ந்து விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அதிமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதிமுகவில் பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சென்னை சேலம் தவிர கடந்த 4 வாரங்களாக வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றதற்குப் பிறகு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
2014-ல் ஜெ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு அளித்த நாள் இன்று!
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் வரும் 29ஆம் தேதி மாலை மதுரை ஜெயம் தியேட்டர் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்ற உள்ள நிலையில் மேடை அமைய உள்ள இடத்தில் மதுரை மாவட்ட கழகச் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் ஆன செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
அதிமுகவினர் உற்சாகம்
எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி மதுரையில் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். மதுரை , விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு தென்மாவட்டங்களில் அவர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இது என்பதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து விருதுநகர் வரை பிரம்மாண்ட பதாகைகள் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மதுரையின் மாஜி
கடந்த காலங்களில் அதிமுகவில் எதிரும் புதிருமாக இருந்த மதுரையின் மாஜிக்களும் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்று சேர்ந்து ஒன்றாக ஏற்பாடுகளை கவனித்து வருவது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவரும் கடந்த கால கசப்புகளை மறந்து ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நிர்வாகிகளும் உற்சாகமாக பணிகளை கவனித்து வருகின்றனர்.
சொகுசு பேருந்து
மேலும் தொடர்ந்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரச்சார வாகனம் ஒன்று துவக்கி வைக்கப்பட உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட மினி சொகுசு விடுதி போல இந்த வாகனத்தில் 'நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார்' 'மதுரையில் எடப்பாடியார்' என அவரது புகைப்படத்துடன் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், வழக்கமாக இடம்பெறும் பெரியாரின் படம் மட்டும் மிஸ் ஆகியுள்ளது.