திமுகவுக்கு தோல்வி பயம்.. அதிமுக 100 சதவீதம் அன்னபோஸ்டில் ஜெயிக்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை: வருகிற உள்ளாட்சித் தேர்தலில் திமுக போட்டியிட அச்சம் படுகிறது என்றும் தாங்கள் அன்ன போஸ்டில் வெற்றி பெறப் போகிறோம் என்பது முற்றிலும் உண்மை என்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து பெற்று வருகிறார்.
இந்த சூழ்நிலையில் செவ்வாய்கிழமையான இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அளவுக்கதிகமான விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் 100% வெற்றி பெறப்போவது உறுதியாகி உள்ளது.
முதற் கட்டமாக நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் இருக்குற ஒன்னேகால் லட்சம் பதவிகளில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் பதவிகளுக்கான போட்டித் தேர்தல் முதல் கட்டமாக நடக்கிறது. 99 ஆயிரம் வார்டு உறுப்பினர்கள் போன்ற பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி மாநகராட்சி போன்றவற்றின் பதவிகள் எண்ணிக்கை என்பது கொஞ்சம் தான். தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிற தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்.
முதலில் இந்த தேர்தலில் திமுக போன்ற கட்சிகள் சந்திக்கட்டும். அடுத்த தேர்தலை பற்றி அப்புறம் யோசிக்கலாம். தோல்வி பயத்தின் காரணமாக திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நாங்கள் அன்ன போஸ்டில் வருவதற்கான வாய்ப்பு 100 சதவீதம் உள்ளது. அதிமுகவிற்கு திமுக மட்டுமே எதிர்க்கட்சித் தவிர மற்ற கட்சிகள் எங்களுக்கு பொருட்டே கிடையாது" என்றார்.