100 நாளில் குறைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே.. 'இதை' செய்ய முடியுமா? ராஜன் செல்லப்பா கேள்வி
மதுரை: ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாளில் தீர்த்துவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளாரே, அவர் நினைத்தால் இந்த ஒரு விஷயத்தை செய்துவிட முடியுமா என அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.
Recommended Video
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார் ஸ்டாலின். அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களுக்குள் மக்களின் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால் அதிமுக தலைவர்களோ, திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது என்று கூறி வருகின்றனர்.
ரூ.1 கோடி பணிகள்
இந்த நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் வடக்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 5 புதிய சாலைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.வி ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார், நிகழ்வில் ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் பங்கேற்றனர்.
சாலை போடப்பட்டுள்ளது
பின்னர் விழா மேடையில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில் எம்.பி கனிமொழி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடவில்லை என பேசி உள்ளார், எந்த சாலை போடவில்லை என கூறவில்லை, யாரோ எழுதி கொடுத்ததை எம்.பி கனிமொழி பேசி வருகிறார்.
கட்சத் தீவை மீட்க முடியுமா
மக்கள் குறைகளை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்கிறார். அதிமுக ஆட்சியில் 1 நாளில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கப்படுகின்றன. ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாளில் ஸ்டாலினால் கச்சத்தீவை மீட்க முடியுமா? திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
விவசாய கடன் தள்ளுபடி
முதல்வரின் திட்டங்களை மக்கள் வரவேற்று வருகிறார்கள். தமிழக அரசின் சாதனை திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது. விவசாய கடன்கள் விவசாயிகள் நலன் கருதியே தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் அதிமுகவினர் பயன்பெறவில்லை. விவசாய கடன்கள் தள்ளுபடியில் யார், யார் பயன்பெற்று உள்ளார்கள் என்கிற பட்டியலை முதல்வர் வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.