அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்... அப்போ கூட்டணி? - ரவீந்திரநாத் குமார் இப்படி சொல்லிட்டாரே
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது ரவீந்திரநாத் குமார் எம்பி கூறியுள்ளார்.
மதுரை: நடைபெறவுள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறியுள்ள தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் குமார் எம்பி, கூட்டணி குறித்து மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. பல முனை போட்டி நிலவுவதால் கட்சி ஆதரவுடன் சொந்த செல்வாக்கு இருப்பவர்களை கவுன்சிலர்களாக ஜெயிக்க முடியும்.
தமிழகத்தில் மொத்தம் 12838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் கூட்டணி, பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து தனித்தனியே ஆலோசனை நடத்துகிறது. எந்த வார்டு யாருக்கு தருவது, எதை தக்க வைத்துக்கொள்வது என்று பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன.
ரவீந்திரநாத் குமார் எம்பி
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் பல கேள்விக்கும் பதில் அளித்த அவர், மதுரையில் இருந்து தேனி செல்லக்கூடிய ரயில்வே பாதை பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், வருகிற 31ஆம் தேதி அதிவிரைவு ரயில் இயக்க சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.
ரயில்வே அமைச்சருக்குக் கடிதம்
விரைவில் தேனி - போடி வரையிலான ரயிலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் பணி தொடங்க உள்ளதாக கூறியுள்ளனர்.
இலங்கை அரசு ஏலம்
தொடர்ந்து தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடும் முடிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரவீந்தரநாத் குமார், இதுகுறித்து ஏற்கனவே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடுவது கண்டனத்துக்குரியது என்றார்.
பிரகாசமான வெற்றி
தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எம்.பி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் இதற்கு முன் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் புரிந்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். எனவே அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்
நழுவலான பதில்
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் ரவிந்திரநாத் குமார் தெரிவித்தார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக இணைந்து போட்டியிட்டது. கூட்டணியில் இருந்து விலகுவதாக இதுவரை பாஜக சொல்லவேயில்லை. அதே நேரத்தில் அதிமுகவும் பாஜக கூட்டணி வலுவாக உள்ளதாகவே கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தெளிவான பதில் சொல்லாமல் நழுவலான பதில் சொல்லியிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் பி. ரவீந்திரநாத் குமார்