திட்டமிட்டபடி அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... வழக்குகள் முடித்து வைப்பு
மதுரை: அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் ஜல்லிக்கட்டுகுழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து அலங்கநல்லூர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதே போல், ஜனவரி 15ம் தேதி திட்டமிட்டபடி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்றும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடந்த 20 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம், குழுவில் இடம் பெற்றுள்ள யாருக்கும் முதல் மரியாதை தரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 வழக்குகள்
அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த விழா குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே ஜாதி ஆதிக்கம் இருக்க கூடாது என 14 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் 11 பேர் சேர்ப்பு
இந்த வழக்குகள் இணைக்கப்பட்டு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவில் மேலும் 11 பேர் சேர்க்கப்பட்டனர்.
அரசு தரப்பில் விளக்கம்
இந்தநிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் 24 பேராக இருந்த உறுப்பினர்களை 35 உறுப்பினர்களாக உயர்த்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் விளக்கத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு
இதே போல், ஜனவரி 15ம் தேதி திட்டமிட்டபடி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படியே நீதிமன்றமே 20 பேர் கொண்ட குழுவை அமைக்கும். இதில் உள்ளூர்க்காரர்கள் 16 பேரும், 3 வக்கீல்களும் இடம் பெறுவர். ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர் இருப்பார். இந்தக் குழுவில் உள்ள யாருக்கும் முதல் மரியாதை தரக் கூடாது என்று ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.