பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. திமுக ஆர்ப்பாட்டம்.. மதுரையில் அண்ணாமலையின் கொடும்பாவி எரிப்பு
மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலையில் கொடும்பாவியை தீயிட்டு எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் ஒசூர் உள்பட பிற இடங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் பிடிஆர் காரில் தேசியக் கொடி பறந்தது கூட தெரியாதா? பாஜகவினர் அநகாரீகம்! தலைவர்கள் வேதனை!
வார்த்தை போர்
முன்னதாக இன்று மதியம் அவரது உடல் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த வேளையில் மரியாதை செலுத்தும் விவகாரத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது.
கார் மீது காலணி வீச்சு
இதையடுத்து அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டு சென்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். மேலும் காரை முற்றுகையிட முயன்றனர். இருப்பினும் போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு அமைச்சரின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பாஜகவினரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
அண்ணாமலையில் கொடும்பாவி எரிப்பு
இருப்பினும் திமுகவினர் தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே திமுக தெற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாச பிரபு உட்பட 15க்கும் மேற்பட்ட திமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் எரிந்த உருவ பொம்மையின் மீது தண்ணீர் ஊற்றி அனைத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்துள்ளனர்.
ஒசூரில் சாலை மறியல்
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர பேருந்து நிலையம் முன்பாக பாஜகவினரின் செயலை கண்டித்தும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவியை காலணியால் தாக்கி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் சுமார் அரைமணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பிற இடங்களிலும் திமுகவின் பாஜகவினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.