தங்கதமிழ்ச்செல்வனுடன் ஒன்னுமன்ன பழகுனவங்களே.. இப்படி மாறிட்டாங்களே..மதுரையில் தெறிக்கும் போஸ்டர்கள்!
Recommended Video
மதுரை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக பேசி விமர்சித்து வரும், தங்கதமிழ்செல்வனை கண்டித்து அமமுக வினர் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தினகரனுடன் சென்ற 18 எம்எல்ஏக்களில் முக்கியமானவர் தங்க தமிழ்ச்செல்வன். இவருக்கும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த காரணத்தால், தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுடன் சேர்ந்து அரசியல் செய்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் அம்மா முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த போது அவரது நம்பிக்கைக்கு உரியவராக தங்க தமிழ்ச்செல்வன் மாறினார். லோக்சபா தேர்தலில் தேனியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அவரை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.அப்போது அதிமுகவையும். ஒ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. வெற்றி பெறுவார் என கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார். அதன்பிறகு அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள்.அந்த வகையில் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தங்கம் புறக்கணிப்பு
இதனால் தங்க தமிழ்செல்வனுக்கு பதில் வேறு ஒருவரை தேனியில் முக்கிய பொறுப்பில் நியமிக்க தினகரன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தங்கதமிழ்செல்வனை புறக்கணித்து அமமுகவின் கூட்டம் நடந்துள்ளது.
கடுமையாக விமர்சனம்
இதை கேள்விபட்டு ஆத்திரம் அடைந்த தங்கதமிழ்செல்வன் டிடிவி தினகரனின் பிஏவுக்கு போன் போட்டு கடுமையாக பேசினார். பொட்டத்தனமாக அரசியல் செய்வதாக தினகரனை தங்கம் கடுமையாக விமர்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமமுகவினர் போஸ்டர்கள்
அதன்பின்னர் தான் பேசியது உண்மை தான் என்று கூறி டிடிவி தினகரனை தொடர்ந்து ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்துள்ள அமமுகவினர் தங்கதமிழ்செல்வனை கண்டித்து அமமுக வினர் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
களப்பணி ஆற்றியவர்கள்
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்ட மீனவர் அணி, பொறியாளர் அணி என கட்சியில் பல அணிகள் சார்பாக தங்க தமிழ்செல்வன் பேசியதை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை உள்ளிட்ட மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக தங்க தமிழ்ச்செல்வனுடன் இவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக பல்வேறு களப்பணி ஆற்றவர்கள் ஆவர். இன்று அவர்களே தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து இப்படி போஸ்டர்களை ஒட்டி உள்ளார்கள்.