ஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா? பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்
தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க என்று ஆவேசத்தோடு பைலை தூக்கி வீசியிருக்கிறார் திருமங்கலம் கோட்டாட்சியர். எனக்கு கோபம் வராது வந்தா அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
திருமங்கலம்: அமைதியாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தை திடீரென்று ஆவேசத்தோடு பைலை தூக்கி வீசினார் அந்த கோட்டாட்சியர். காரணம் தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதற்கான வீடியோ இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு வந்த கிராமவாசி கூறவே, எங்கே ஆதாரத்தை காட்டுங்க பார்ப்போம் என்று கூறி ஆவேசமடைந்தார் அந்த கோட்டாட்சியர். வீடியோ ஆதாரத்தை காட்டாமல் போகவே ஆவேசத்தின் உச்சிக்கே போய் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.
அந்த கோட்டாட்சியர் பெயர் சௌந்தர்யா. மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியராக இருக்கிறார். திருமங்கலம் அருகே கூத்தியார் குண்டு அருகே கருவேலம்பட்டியில் உள்ள கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது கிராம மக்களின் புகார். கல்குவாரியில் உள்ள கிரசர்களில் இருந்து வரும் தூசியால் வாழை மரங்களும், வீடுகளும் தூசியால் நிரம்பி உடல் நலமும் பாதிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கல்குவாரியை மூடக்கோரி பல நாட்களாக புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கிராம மக்கள் அனைவரும்
தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கல்குவாரியை மூடக்கோரி திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் முக்கிய பிரமுகர்களை அழைத்து திருமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சௌந்தர்யா பேச்சுவார்த்தை நடத்தினார்.
சௌந்தர்யா தலைமையில், டிஎஸ்பி வினோதினி முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகி சரவணக்குமார் உடன் 5 பேரும் கல்குவாரியை நடத்தும் உரிமையாளருடன் இணைந்து 4 பேரும் என மொத்தம் 10 பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த சரவணக்குமார், கோட்டாட்சியர் செளந்தர்யா கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி குற்றஞ்சாட்டினர், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறவே கோட்டாட்சியர் கோபமடைந்தார்.
எனக்கு எதிராக வீடியோ ஆதாரம் இருக்குன்னு சொன்னீங்க இல்ல.. காட்டுங்க... எங்க காட்டுங்க பார்ப்போம் என்று ஆவேசத்துடன் பேசினார்.
புகார் சொன்ன நபரால் எந்த வீடியோ ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. மொபைல் போனை பார்த்துக்கொண்டே இருக்கவும் கோபத்தின் உச்சிக்கே போனார் சௌந்தர்யா... என் மேல புகார் சொன்னீங்க, வீடியோ ஆதாரமும் காட்டலை உங்க மேல மான நஷ்ட வழக்கு போடவா? என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே அரசு அலுவலகம் என்றும் பார்க்காமல் பைலை தூக்கி வீசினார்.
இதனால் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பேச்சுவார்த்தை எந்தவிட உடன்பாடும் எட்டப்படாமல் இழுபறியாக முடிந்தது. எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கிராம மக்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.