நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு என்ன பிரச்சினை?.. அரசுக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி
மதுரை: அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்ப விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்து விட்டது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளியில் காலியாக உள்ள 1,331 பணியிடங்களுக்கு அந்தெந்த பள்ளிக்கு அருகே தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யுமாறு பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் அனுமதி அளித்தது.

இதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நிரந்தர பணியிடங்களுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை அளிக்க நாளை கடைசி நாளாகும்.
இந்நிலையில் அரசின் இந்த முடிவை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்தார். மேலும் இதுக்குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை இரு தினங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்ததாக புகார் எழுந்த நிலையில் , நியமனத்தை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தடையை நீக்கக் கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே ? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம் ?என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
டெட் தேர்ச்சி பெற்றவர்கள் , தகுதியான ஆசிரியர்களே தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நியமனம் செய்யமுடியவில்லை எனவும் வாதிடப்பட்டது.
அதைக்கேட்ட நீதிபதி, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டார்.
வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.