அரக்கோணம் படுகொலை.. போலீஸ் விசாரணையில் நியாயம் கிடைக்காது.. சிபிஐ விசாரணை தேவை.. திருமா வலியுறுத்தல்
மதுரை: அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலை வழக்கைத் தமிழக போலீசார் விசாரணை செய்தால் நியாயம் கிடைக்காது என்றும் அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் கிராமத்தில் அர்ஜுனன், சூரியா ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் சுடுகாட்டிலும் காத்திருக்க வேண்டிய அவலம்.. சொந்த இடங்களில் உடலை தகனம் செய்ய அனுமதி
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்,
திருமாவளவன் பேச்சு
இது குறித்து திருமாவளவன் கூறுகையில், போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து புகார் பெறவில்லை. மாறாக சௌந்தரராஜன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தை மட்டும், ஒரு புகாராக எடுத்துக் கொண்டு எஃப்ஐஆரை பதிவு செய்துள்ளனர். அதிலும், விசாரணைக்கு முன்னரே, குடித்துவிட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏற்பட்ட கொலை தான் இது என போலீசார் கூறியிருந்தனர்.
சிபிஐ விசாரணை தேவை
எனவே, தமிழக போலீசார் விசாரணை செய்தால் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாது என்ற அச்சம் எழுகிறது. எனவே, இந்த இரட்டைக் கொலையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த தேர்தலின் போது ஏற்பட்ட தகராறு. அதனடிப்படையில், சாதி வெறியர்கள் பழிவாங்க இந்த கொலையைச் செய்துள்ளனர். சமாதானம் பேசிக் கொள்வோம் என்று அழைத்து, கொலை செய்துள்ளனர்.
படுகொலை
இரண்டு பேரை ஆட்களைத் திரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்கள். இது திட்டமிட்ட சாதிய கொலை. உயிரிழந்தவர்கள் தேர்தலின்போது விசிகவுக்கு வாக்கு சேகரித்தனர். இதுவும் ஒறு காரணம். இதை மூடி மறைக்கும் வகையில் சிலர் திசை திருப்பப் பார்க்கிறார்கள். எனவே தான் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்துகிறோம். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடாத வகையில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலம் வழங்கியதில்லை. சட்டப்படி வழங்கும் நிதியைப் பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதைச் செயல்படுத்தப் பிற மாநிலங்களில் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தவறாமல் நடைபெறுகிறபோது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தவிர்க்கப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பிரச்சினைகளை எல்லாம் திசைதிருப்பி, சாதிய பிரச்சினைகளை ஒருமை படுத்திக் கூறி வருகிறார். பாமக இங்குச் சாதிய வன்கொடுமையைக் கூர் நோக்குவதில் குறியாக இருக்கிறது. மேலும், விசிக பற்றி தவறாகச் சித்தரிப்பதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசுவதும் நீடிக்கிறது. தொடர்ந்து அவதூறு பேசுவதைச் சலித்துக்கொள்ள முடியாது. சட்டரீதியாக எதிர்கொள்வோம், பாமக கட்சி இதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.