குட் நியூஸ்... கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!
Recommended Video
மதுரை: கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பது தொல் பொருள் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் விரகனூருக்கு அருகிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டும் உள்ளது கீழடி கிராமம். மேலும் கீழடி கிராமம் வைகை ஆற்றின் கரையில் உள்ளது.
கீழடியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றை ஒட்டியுள் பகுதியில் தான் பழங்கால பொருட்கள் முதலில் கண்டெடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அமர்நாத் ராமகிருஷ்ணா என்ற அகழ்வராய்சியாளர் தனது குழுவுடன் வைகை ஆற்றங்கரையில் மொத்தம் 293 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
மத்திய அரசுக்கு கடிதம்
அப்போது, இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த நகரம் கீழடியில் புதைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் ஆச்சரியமடைந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
அமர்நாத் தலைமையில் ஆய்வு
இதையடுத்து கீழடி பக்கம் மத்திய அரசும் மாநில அரசும் கவனத்தை திருப்பின. 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முறைப்படி கள ஆய்வுகள் அமர்நாத் தலைமையில் நடைபெறத் தொடங்கின.
முதல் 3 மத்திய அரசினுடையது
இதுவரை கீழடியில் நான்கு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மத்திய தொல்லியல் துறை மூன்று கட்டமாகவும் மாநில தொல்லியல் துறை ஒரு கட்டமாகவும் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டது.
14,500 பழங்காலப் பொருட்கள்
2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 4 கட்டமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. நான்கு கட்ட அகழாய்வில் இதுவரை 14 ஆயிரத்து 500 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. .
இரண்டு ஏக்கர் நிலம்
பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பாண்டபொருட்கள், கட்டிட அமைப்புகள், நாழி, தங்கம் என அகழ்வாராய்ச்சிப் பணியில் கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று பொருட்கள்,சுவடுகள் அனைத்தையும் கீழடியில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் அருங்காட்சியம் கட்டப்பட்டு வைக்கப்பட உள்ளன.
அருங்காட்சியப் பணிகள் தொடக்கம்
இதற்காக வருவாய்த்துறை ஒதுக்கிய இடத்தினை தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அளந்து, கற்கள் ஊண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இடத்தை சுத்தம் செய்து கட்டிடப்பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு
அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுள்ளது. கூடுதலாக நிதி தேவைப்படும் நேரத்தில் தமிழக அரசிடம் கூடுதல் நிதி கேட்டுப்பெறப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.