டேய மைனா டேயாலோ... கிராமிய பாடல் பாடி அமைச்சருக்கு நன்றி சொன்ன கலைஞர்கள்
அரசுப் பேருந்துகளில் இசைக் கருவிகள், கலைப் பொருட்களை சுமைக் கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக அமைச்சருக்கு
மதுரை: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜனை நேரில் கிராமிய கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.
டேய மைனா டேய மைனா டேயாலோ.. என்று ஒரு கிராமிய கலைஞர் பாட நடன கலைஞர் இசைக்கு ஏற்றவாறு ஆட களைகட்டியது மதுரை. தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. மாஃ பா. க. பாண்டியராஜன் தனது குடும்பத்தினருடன் இன்று மதுரை வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்த கிராமிய கலைஞர்கள் உற்சாகமாக பாடினர்.
இரட்டை இலை சின்னம் தெரியுது ராமாயி... கோபுரத்தில் மின்னுது பாரு... முதலமைச்சர் வர்ராறு பாரு என்று உற்சாக குரலில் அமைச்சரின் கையை பிடித்துக்கொண்டு பாட அங்கிருந்தவர்கள் கை தட்டி ஆராவாரம் செய்தனர்.
ஏய்... இந்தா இந்தா... இந்தா... இரட்டை இலை சின்னம் தெரியுது என்று உற்சாகமாக பாடியபடியே கிராமிய கலைஞர்கள் இன்று அமைச்சரிடம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். கரகாட்டம், ஒயிலாட்ட கலைஞர்களும் ஆடி பாடி மகிழ்ச்சியோடு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விபரம்:
நாடகக் கலையையும், அதில் ஈடுபட்டுள்ள நாடகக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாடகக் கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி, நிகழ்ச்சிகளை நடத்திட பிற இடங்களுக்கு ரயில், அரசுப் பேருந்துகளில் கட்டணச் சலுகையுடன் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பயணம் மேற்கொள்ளும்போது கொண்டு செல்லும் இசைக்கருவிகள், கலைப் பொருள்களை இலவசமாகப் பேருந்துகளில் கொண்டு செல்ல பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர் என நாடகக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனைக் கருத்தில் கொண்டு, நாடகக் கலைஞர்கள் தங்களது நாடகக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பிற இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, பேருந்துகளில் தங்களது கலைப்பொருட்கள், இசைக் கருவிகளை இலவசமாகக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் தரப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.
'அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, நாடகக் கலைஞர்களுக்கு மட்டும் கீழ்க்காணும் உபகரணங்களை பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கும்படி அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடகக் கலைஞர்களுக்கான கலைப்பொருள்கள், இசைக்கருவிகள்
ஆடை, அணிகலன்கள், ஒப்பனைப் பொருள்கள், இசை வாத்தியக் கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம் மற்றும் இதர ஏதேனும் சிறிய அளவிலான இசைக்கருவிகள் பேருந்துகளில் கொண்டு செல்லலாம்.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமான இயல், இசை, நாடக மன்றத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை நாடக, கிராமியக் கலைஞர்களுக்குச் செய்து வரும் தமிழக அரசு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், எதிர்வரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பினால் கிராமிய கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரையில் தமிழ்நாடு மாநில கிராமியக் கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள் மாநிலத் தலைவர் கலைமாமணி தி.சோமசுந்தரம் தலைமையில் கலைமாமணிகள் திருமதி டி.லெட்சுமி, திருமதி யு.பார்வதி, பனையூர் பி.ராஜா மற்றும் கரகாட்ட ஒயிலாட்ட கலைஞர்கள் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. மாஃ பா. க. பாண்டியராஜன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.