பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுபவர்கள் தமிழினத்தின் துரோகிகள்... பொன். ராதாகிருஷ்ணன் காட்டம்
மதுரை: பாஜக அமைக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில், நாளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரவுள்ளார். இந்தநிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னதாக பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக நடத்தும் மாநாடு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்றார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பியுஷ் கோயல் ஆகியோர் நாளை வருகின்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை விட வலுவான கூட்டணியை அமைப்போம்.
பாஜக அமைக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும். 2019 தேர்தலில் 30க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவோம் என நம்புகிறேன்.
தமிழினத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.