கொரோனா கெடுபிடியால் மாலை அணிவதை தவிர்த்த ஐயப்ப பக்தர்கள் - பூஜை பொருட்கள் விற்பனை மந்தம்
கொரோனா பீதி மற்றும் மத்திய மாநில அரசுகளின் லாக்டவுன் கட்டுப்பாடுகளால், நடப்பு ஆண்டில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
மதுரை: கொரோனா அச்சம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் லாக்டவுன் கட்டுப்பாடுகளால், நடப்பு ஆண்டில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பூஜை பொருட்கள், மாலை மற்றும் காவி வேட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வழக்கமாக கார்த்திகை மாதம் பிறக்கிறது என்றாலே சபரிமலை ஐயப்பன் மற்றும் தைபூசத்திற்கு மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் பெரும்பாலும், அதற்கு முதல் நாளே தேவையாண அனைத்து பூஜை பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். கார்த்திகை பிறந்த உடனே, விடியற்காலையே குளித்து முடித்து அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று மாலையணிந்து வந்து விடுவார்கள்.
கார்த்திகை முதல் நாளில் மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் கார்த்திகை மாதம் நடக்கும் படிபூஜை, பின்னர் மண்டல பூஜை அதைத் தொடர்ந்து தை முதல் நாளன்று நடக்கும் மகர விளக்கு பூஜை அன்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது நடைமுறை. வெகு சிலர் மட்டுமே கார்த்திகை மாத இறுதியில் மலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோன நோய் தொற்று அனைத்து நடைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை தலைகீழாக மாற்றிவிட்டது என்று சொல்லலாம். தற்போது கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு, மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்பும் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்து, தமிழக எல்லையில் உள்ள கொரோனா நோய் முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து நொய் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே, ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள அரசின் அறிவிப்பினால், இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாமல் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மன வேதனையில் உள்ளனர். இருப்பினும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கார்த்திகை முதல் நாளான நேற்று பல்வேறு கோவில்களிலும், மாலையணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் தங்களுக்கும் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாலை அணிந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தில் குருசாமி கைகளால் மாலையணிந்து கொண்டனர். அதே போல் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சபரி மலை ஐயப்பனின் மூல ஸ்தலமாக கருதும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். முன்னதாக தாமிரவருணி நதியில் புனித நீராடிய பக்தர்கள் புதிய கருப்பு உடை அணிந்து வந்தனர். அவர்களுக்குக் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.
ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதை முன்னிட்டு பாபநாசம் சிவன் கோயில், அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பாபநாசம், அம்பாசமுத்திரம் தாமிவருணி ஆற்றுப் படித்துறைகளிலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவில் மற்றும் யாகப்பா நகரில் உள்ள ஐயப்பன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கினர். ஒரு சில பக்தர்கள் கோவில்களுக்கு செல்லாமல் தங்களுடைய வீட்டிலேயே பூஜை அறையில் தங்களின் பெற்றோர் கைகளால் மாலையணிந்து விரதத்தை மேற்கொண்டனர்.
கொரோனா நோய் தோற்று பீதியால் கடந்த ஆறு மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சபரிமலை சீசன் மற்றும் பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்பவர்களால் தங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று நினைத்திருந்தனர். ஆனால், தமிழக மற்றும் கேரள அரசுகளின் கட்டுப்பாடுகளால், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பக்தர்களின் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்பட்டது. மாலை, காவி, கருப்பு வேஷ்டி மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்து விட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது.