சிக்கலில் திமுக, மதிமுக.. தேர்தலில் போட்டியிட முடியாதா? கருத்து கேட்கிறது ஹைகோர்ட்
மதுரை: பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய மற்றும் கருப்பு பலூன் பறக்கவிட்ட கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்த வழக்கில், எதிர்மனுதாரர்களாக திமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரக்வீ என்பவர் இதுதொடர்பாக ஹைகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கருப்புக் கொடி
மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோதெல்லாம், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டப்பட்டது, மற்றும் கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய நலத்திட்டங்களை இந்த போராட்டங்கள் தடுக்கின்றன. மேலும், அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவியில் உள்ள ஆளுநர், பிரதமர் போன்றோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தவறான விஷயம்.
தடை விதிக்க கோரிக்கை
எனவே, இந்த போராட்டங்களில் ஈடுபட்ட கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதோடு, மொத்தமாகவே தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விசாரணை
நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்ட,
கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
திமுக, மதிமுக
மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் இயக்கங்களில், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், திராவிடர் கழகம், கம்யூனிட்ஸ்ட் கட்சிகள், தமிழ் புலிகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் தங்கள் பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.