கள்ளழகர் கோயில் வளாகத்தில் தண்ணியடிக்க கூடாது… கேமிரா பிக்ஸ் பண்ணுங்க.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை:கள்ளழகர் கோயில் வளாகத்தில் மது அருந்துவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கள்ளழகர் கோயில் வளாகம் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சிறப்பு மிக்க கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். ஆனால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் சரிவர செய்து கொடுப்பதில்லை.
வசதிகள் வேண்டும்
கோயிலை சுற்றி நூற்றுக்கணக்கான மண்டகப்படிகள் உள்ளன. அதற்கு அதிக சொத்துக்களும் உள்ளன. எனவே அந்த சொத்துக்களை மீட்டால் கோயில் நிர்வாகமே தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொள்ள முடியும். எனவே கோவில் சொத்துக்களை விரைவில் மீட்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் முன்பு விசாரணை
அந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் அழகர் கோவில் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அதிகாரி கொலை
குறிப்பாக நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அழகர் கோவிலில் உள்ள விடுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில் நிர்வாகம் சரியாக பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் அங்கு வரும் பொது மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்ற வாதத்தை எடுத்துவைத்தார்.
மது அருந்த தடை
இதையடுத்து நீதிபதிகள் கோயில் வளாகத்தில் மது அருந்தத தடைவிதித்தும், கோயில் வளாகம் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் உத்தரவில் கூறி இருப்பதாவது:அழகர் கோயிலில் உள்ள அந்த விடுதி யார் கட்டுப்பாட்டில் உள்ளது? எத்தனை விடுதிகள் இதுபோல உள்ளன? அந்த விவரங்களை உடனடியாக அளிக்க வேண்டும்.
கேமிரா பொருத்த ஆணை
கோயில் வளாகம் முழுவதிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். . குறிப்பாக அப்பகுதிகளில் மது அருந்தத தடை விதிக்கப்படுகிறது. அழகர் கோயிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகபடிகள் உள்ளன? அந்த மண்டகப் படிகளுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அந்த சொத்துக்களின் ஆக்கிரமிப்பு குறித்தும் வரும் 22-ம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.