‘பிராங்க் ஷோ’ விற்கு தடை… மதுரை ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: 'பிராங்க் ஷோ' எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிலரை ஏமாற்றி அதன் மூலம் சமூக கருத்துகள் கூறுவதற்கும், சிரிப்பை வரவழைப்பதற்காகவும் எடுக்கப்படும் பிராங்க் ஷோக்களால், பலர் மனங்கள் புண்படுவதாக சொல்லப்படுகிறது.
இதே போல், இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்குகளில் மிக முக்கியமானதாக உள்ளது Tik TOk செயலி அதேபோன்று பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு.இதுபோன்ற மொபைல் செயலிகளால், மகிழ்ச்சி ஏற்பட்டாலும், இறுதியில் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்களே அதிகம் என கூறப்படுகிறது.
ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா?... முதலமைச்சர் பழனிசாமி கொந்தளிப்பு
நீதிமன்றத்தில் மனு
இந்தநிலையில், தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சீன செயலி
மேலும் அந்த மனுவில், Tik Tok என்ற சீன செயலியை பெரியோர், சிறியோர் என வயது வித்தியாசமின்றி பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு அபாயம் வரையில் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.
தடைவிதிக்க வேண்டும்
Tik Tok செயலியை இந்தோனேஷியாவில் தடை செய்துள்ளனர். அதேபோல், இந்தச் செயலிக்கு இந்தியாவிலும் தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இளைஞர்கள் பாதிப்பு
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் நமது குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான ப்ளூ வேல் கேம் குறித்து நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான், மத்திய அரசு அந்த விளையாட்டுக்குத் தடை விதித்தது என்று சுட்டிக்காட்டினார்.
பிராங்க் ஷோவிற்கு தடை
இதேபோல், சமூகத்துக்கு தீங்கு விதிக்கும் செயலிகளை அரசே முன்வந்து தடைவிதிக்க வேண்டும். பிராங்க் ஷோ போன்ற வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
அமைச்சர் உறுதி
ஏற்கனவே, 'Tik Tok' செயலியால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை அடுத்து, அந்த செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.