அம்பேத்கரின் புகழ் பரப்புவதில் பாஜகவுக்கு நிகர் யாருமில்லை... வி.சி.க. மீது எல்.முருகன் பாய்ச்சல்..!
மதுரை: அம்பேத்கரின் புகழை பரப்புவதில் பாஜகவுக்கு நிகர் யாருமில்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்,முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலையிட சென்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து நானே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவேன், முடிந்தால் தன்னை தடுத்துப் பார்க்கட்டும் என சவால் விடுத்த எல்.முருகன் இன்று மதுரை சென்றார்.
அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திருமாவளவன் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அம்பேத்கர் பொதுவானவர் என்றும் கூறினார்.
மேலும், அம்பேத்கர் பிறந்தநாளை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டது பாஜக ஆட்சியில் தான் என்றும் அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆப் வெளியிட்டதும் தாங்கள் தான் எனவும் முருகன் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் அம்பேத்கருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டதும் பாஜக ஆட்சியின் தான் எனச் சுட்டிக்காட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வட மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும் இதன் காரணமாக வி.சி.க.வில் இருந்து பலரும் பாஜகவில் இணைந்து வருவதாகவும் எல்.முருகன் கூறினார்.
அரக்கோணத்தில் நடந்த நிகழ்வை பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது எனக் கூறிய முருகன், விசிகவும், திமுகவும் இதனை சாதிய பிரச்சனையாக மாற்றுவதாக குற்றஞ்சாட்டினார். மதுரையில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய விசிகவினரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய எல்.முருகன், அம்பேத்கருக்கு பெருமை தரக்கூடிய வகையில் பாஜக அரசு செய்த மேலும் சில நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் கூறினார்.