கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடைக்கானலைச் சேரந்த ஆரோக்கியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரி அருகே குறிப்பிட்ட அளவு நிலத்தை படகு மற்றும் துடுப்பு கிளப் நிர்வாகத்துக்கு தமிழக அரசு குத்தகைக்கு அனுமதி அளித்தது.
ஆனால் காலக்கெடு 2019 செப்டம்பர் 1ம் தேதியே முடிந்துவிட்டது. ஆனால் அனுமதித்ததை விட கூடுதல் நிலத்தை சட்டவிரோதமாக தன் கட்டுப்பாட்டில் இந்த கிளப் வைத்துள்ளது. படகுகள் இயக்கம் மற்றும் கடைகள் வைத்து வணிக ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
படகுகளை இயக்க
கார்ல்டன் ஓட்டல் நிர்வாகம் அனுமதியின்றி படகுகளை இயக்குகிறது. இதனால் கொடைக்கானல் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கிளப் நிர்வாகத்திற்கு குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கக்கூடாது. ஏரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தடை விதிக்கணும்
கொடைக்கானலில் கிளப் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படகுகள் இயக்க தடை விதிக்க வேண்டும். படகுகள் இயக்க விதிகள்படி பொது ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கலெக்டருக்கு நோட்டீஸ்
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கமிஷனர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.
படகு குழாமுக்கு சீல்
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு, கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.