58ம் கால்வாயில் திடீர் உடைப்பு.. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்.. விவசாயிகள் வேதனை!
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்திலுள்ள 58 கிராமங்களுக்கு பாசன வசதி பெரும் வகையில் வைகை அணையிலிருந்து 58 கால்வாய் அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் 58ம் கால்வாயில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கக்கோரி உசிலம்பட்டி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என்று தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று 58 கால்வாய் பகுதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் வைகை அணையில் இருந்து 100 அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே புதூர் கிராம பகுதியில் கால்வாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனை ஓட்டத்துக்கு முன்னர் கடைகள் பலமாக உள்ளதா என பரிசோதிக்காமல் தண்ணீர் திறந்து விட்டதாலேயே உடைப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க உசிலம்பட்டி பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே உடைந்து செல்வது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். இதேபோல் புதூர் அருகே தொட்டிப் பாலத்தின் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது நீர்க்கசிவு அதிகமானதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது இது பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டதை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 58 கால்வாய் பாசன விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.