தாயையும் மகளையும் திட்டிய தம்பி.. வெகுண்ட அண்ணன்.. வெட்டி வீழ்த்தினார்!
Recommended Video
மதுரை: தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய இளைய மகன் சம்பத் (வயது 33) இவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய அண்ணன் பாண்டி (வயது 36) இவருக்கு திருமணமாகி நந்தினிஸ்ரீ என்ற 8 வயது குழந்தை உள்ளது. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை பிரிந்து குழந்தையுடன், தனது வீட்டில் அம்மா மற்றும் தம்பி சம்பத் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சிறுமி நந்தினிஸ்ரீ வீட்டினுள் சிறுநீர் கழித்து விட்டாள். இதையடுத்து சிறுமி என்று கூட பாராமல் அதனை கண்டித்து சம்பத் குழந்தையையும் தனது தாயாரையும் மிகவும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்தார் பாண்டி. இரவு முழுவதும் மது அருந்திய அவர் அப்படியும் ஆத்திரம் தீராமல், அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தம்பி சம்பத்தை கழுத்து மற்றும் நெற்றியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சம்பத் துடிதுடித்து இறந்து போனார். இதனைத்தொடர்ந்து பாண்டி தனது தவறை உணர்ந்து தாமாகவே திருநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருநகர் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்து பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணன் மகள் சிறுநீர் கழித்த விவகாரத்தை பெரிதாக்கி, அதனால் ஏற்பட்ட வாய்த் தகராறில் தனது தம்பியை கொலை செய்த இந்த நிகழ்வு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது