புரேவி புண்ணியத்தால் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெங்கு எவ்வளவு மழை அளவு தெரியுமா
நிவர் புயல் சோகம் மறைவதற்குள் வங்கக்கடலில் உருவானது புரேவி புயல். புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மதுரை: புரேவி புயல் வலுவிழந்து ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இதன்காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.
பாம்பனில் இருந்து 70 கி.மீ., கன்னியாகுமரியில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம் தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, ஜீரோ பாயிண்ட்டில் தலா 11 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ, மழை பதிவாகி உள்ளது. சென்னையில் 356 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ, பேச்சியார்தோப்பு 20, புவனகிரி 19 செ.மீ, கொத்தவாச்சேரியில் 33 செ.மீ, லால்பேட்டையில் 29 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 33 செ.மீ மழையும், சீர்காழியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 5 செ.மீ. மழை பதிவானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குடவாசலில் 21 செ.மீ,நன்னிலத்தில் 14 செ.மீ., வலங்கைமானில் 13 செ.மீ. மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ. பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் பாலவிடுதி 5 செ.மீ., மயிலம்பட்டி 4 செ.மீ., கிருஷ்ணாபுரம், மாயனூர், அரவக்குறிச்சியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.