செல்போன் டிரைவிங்கா...? போனை பிடுங்கினா என்ன? மத்திய, மாநில அரசுகளை கேள்வி கேட்ட ஹைகோர்ட்
மதுரை:செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல் போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறல் பற்றி புகார் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிபியிடம் தகவல் பெற்று அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல் போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.