அப்ப, டெபாசிட் இழந்த திமுக என்று நாங்கள் அழைக்கலாமா?... தமிழிசை ஆவேசம்
மதுரை: நோட்டு கொடுத்து நோட்டாவை விட வாக்குகள் பெறுவது பெரிதல்ல என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற மீண்டும் மோடி... வேண்டும் மோடி என்ற கருத்தோடு நடைபெற்ற இருசக்கர வாகன யாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். நாளைய தினம் அமித்ஷா அவர்கள் ஈரோடு வருகிறார்.
நாளை மறுதினம் ரவிசங்கர் பிரசாத் மதுரை வருகிறார். அதேபோல் நிதின் கட்கரி சென்னை வருகிறார். பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவது உற்சாகத்தை அளிக்கிறது.
எல்லோரும் வாங்க ஒத்தைக்கு ஒத்தை.. நாங்களும் நிற்கிறோம்.. தமிழிசை அலேக் சவால்
திருப்பு முனை
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மதுரை வருகை மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கூட்டமும் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. எனவே கருப்புக்கொடி காட்டுபவர்கள் பற்றியும் எதிர்வினையாற்றுவார்கள் பற்றியும் எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. முதலமைச்சர் அறிவித்திருக்கின்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். 73 லட்சம் விவசாயிகள் மோடி அவர்களின் விவசாய உதவி திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
கூட்டணி அறிவிப்பு
தமிழகத்தின் பொறுப்பாளரான முரளிதரராவ் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார். ராமலிங்கம் அவர்கள் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க ஒன்று. இதே போல் எந்த ஒரு இடத்திலும் கொலைகளும் காழ்ப்புணர்ச்சிகள் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
விமர்சனம்
பாஜக நோட்டாவுடன் தான் போட்டி போடும். அவர்கள் மட்டும் நோட்டாவுடன் போட்டி போடக் கூடாது என்று பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து இருக்கிறார்கள் என்று திக தலைவர் வீரமணி கூறிய கருத்துக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன்,தேர்தலையே சந்திக்காத வீரமணி அவர்கள் இதை பேசுவதற்கு தகுதியற்றவர்.
டெபாசிட் இழப்பு
திமுக ஆர்.கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் திமுக டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா? நோட்டு கொடுத்து நோட்டாக்கு மேல் வாக்குகளைப் பெறுவது பெருமை அல்ல. இதே திமுக ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது என்பதை வீரமணி அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனியாக தேர்தலை சந்திக்க நேர்ந்தால் பாஜகவும் தனியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.