"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.." மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை
மதுரை: "அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.. கூட படிக்கிற ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி செய்யறாங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. வேற இடத்துக்கு என்னை மாத்து" என்று தந்தையிடம் அடிக்கடி கேட்ட 9-ம் வகுப்பு மாணவனை சக மதாணவர்கள் இன்று பிளேடு வைத்து கிழித்து அறுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சரவணகுமார்.
நேற்று ஸ்கூல் முடியும்நேரம், இவனது பையை சக மாணவர்கள் விளையாட்டுக்கு ஒளித்து வைத்துள்ளனர். ஸ்கூல் பையை காணாமல் நிறைய நேரம் தேடி கொண்டே இருந்தான் சரணவக்குமார். பிறகு ஒளித்து வைத்ததற்கு சக மாணவர்களிடம் "ஏன் என் பையை ஒளிச்சு வெச்சீங்க" என்று கோபப்பட்டான்.
பிளேடு
அதற்கு சக மாணவர்கள் "எவ்ளோ தைரியம் இருந்தா, எங்களை பார்த்து கேள்வி கேட்பே" என்று சரவணக்குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். தங்கள் பையில் வைத்திருந்த பிளேடை எடுத்து, அவனது முதுகிலும் கிழித்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளான்.
பஞ்சர்
அதற்குள் பக்கத்தில் இருந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணக்குமார் பட்டியலினத்தை சேர்ந்தவன் என கூறப்படுகிறது. இதனால் நிறைய அவமானங்களை பள்ளியில் சந்தித்துள்ளானாம். அவனது சைக்கிளை கூட சக மாணவர்கள் அடிக்கடி பஞ்சர் ஆக்கி விடுவார்களாம்.
சாதி பிரச்சனை
"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.. கூட படிக்கிற ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி செய்யறாங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. வேற இடத்துக்கு என்னை மாத்து" என்பானாம். அதற்கு இவனது அப்பாவும், "நாம எங்க போனாலும் இந்த சாதி பிரச்சனையாதான் இருக்கும்.. பின்னாடியே துரத்தும்.. அதெல்லாம் காதுல போட்டுக்காம பேசாம படி.. நமக்கு படிப்புதான் உதவும்"ன்னு சொல்லி சமாதானம் செய்து வந்துள்ளார்.
கொடுமை
ஆனால், மகனின் உடம்பில் ரத்தம் கொட்டுவதை கண்டு "சாதியை காரணம் காட்டி இப்படி செய்யலாமா? என்ன ஆனாலும்சரி, என் பையனை படிக்க வெக்காம விட மாட்டேன்" என்று கதறி அழுதவாறே சொல்கிறார் இந்த ஏழை தந்தை! வெறும் 14 வயதே பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு சாதி வெறியா என்று பொதுமக்கள் அதிர்ச்சியிலும், கவலையிலும் உறைந்து போயுள்ளனர்.