ரயில்வே திட்டங்கள்.. தமிழகத்திற்கு வெறும் ரூ.10000 ஒதுக்கீடு! உபி.க்கு 7000 கோடி.. வெங்கடேசன் எம்பி
Recommended Video
மதுரை: மத்திய பட்ஜெட்டில் உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7000 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து தலா ஆயிரம் வீதம் வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் ஒதுக்கியிருப்பது அநீதியின் உச்சம் என வெங்கடேசன் எம்பி கடுமையாக சாடி உள்ளார்.
மதுரை எம்பி வெங்கடேசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கான மதிப்பு ரூ.12000 கோடி. ஆனால் அத்திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி வெறும் ரூ10000 மட்டுமே.
அதாவது தலா 1000 ரூபாய் விதம் 10 திட்டங்களுக்கு சேர்த்து மொத்தமே ரூ.10000 தான் ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. ஆனால் தேவைப்படும் நிதி என்பது திட்டங்கள் வாரியாக பார்த்தால், திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை திட்டத்திற்கு ரூ.900 கோடி (70 கிமீ), அத்திப்பட்டு புத்தூர் ரூ.1150 கோடி (88 கிமீ), ஈரோடு பழனி திட்டத்திற்கு ரூ.1140 கோடி (91 கிமீ), சென்னை- மாயவரம்-கடலூர் திட்டத்திற்கு ரூ.2300 கோடி (179 கிமீ) தேவைப்படுகிறது.
இதேபோல் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரூ. 1,800 கோடி (143 கி.மீ). கூடுவாஞ்சேரி - திருப்பெரும்புதூர் - கிருங்காகோட்டை - ஆவடி ரூ. 1,500 கோடி (60 கிமீ)., மொரப்பூர் - தர்மபுரி 360 கோடி (36 கி.மீ). திண்டிவனம் - நகரி ₹2,300 கோடி ( 179 கி.மீ), காரைக்கால் - பேரளம், சின்னச்சேலம் - கள்ளக்குறிச்சி ஆகிய திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிது. இதில் கடந்த காலங்களில் நிதியும் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இந்த பட்ஜெட்டில், மேற்கண்ட திட்டங்களுக்கு தற்போது தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10,000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தை மையமாக வைத்து செயல்படுகிற வடக்கு ரயில்வேயில் புதிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ₹7,000 கோடியாகும். இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அநீதி. இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகளின் உச்சமாக இது இருக்கிறது" இவ்வாறு வெங்கடேசன் எம்பி கூறினார்.