மதுரையில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவீட் வெளியிட்டுள்ளனர்.
ரூ. 1264 கோடி மதிப்பில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது.
|
கொண்டாட வேண்டிய நாள்
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் போட்டுள்ள டிவீட்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ள சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு நன்றி. இது கொண்டாடுவதற்கான தினம் என்று கூறியுள்ளார்.
|
நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டுள்ள டிவீட். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இழுபறிக்குப் பின்னர்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டு கால இழுபறிக்குப் பிறகு இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை நனவாகவுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
|
தென் தமிழகத்தில்
சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தென் தமிழகத்தில் அமையவுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் இதற்காக 200 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் கண்டறியப்பட்டு விட்டது. மதுரையில் உலகத் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை இருப்பதை கணக்கில் கொண்டும், தென் தமிழகத்தின் முக்கிய முக்கிய நகரம் என்பதாலும் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடும் போட்டிக்கு மத்தியில்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத் தேர்வுக்கே பல காலம் பிடித்தது. முதலில் காஞ்சிபுரம் என்றார்கள். பின்னர் தஞ்சை என்றார்கள். சேலம் என்றும் பேச்சு அடிபட்டது. கடைசியில் மதுரை தோப்பூர் முடிவானது.