நீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
2018ம் ஆண்டு, செப்டம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகா் சதூர்த்தி ஊா்வலத்துக்கு மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதுதொடா்பாக போலீஸாரிடம் பாஜக தேசிய செயலா் எச்.ராஜா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாக போலீசார் தெரிவித்தபோது, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அப்போது ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிமன்றத்தை விமா்சித்தது தொடா்பாக எச்.ராஜா மீது சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான துரைசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எச்.ராஜாவைப் போல நீதிமன்றத்தை வேறு யாரேனும் விமா்சித்திருந்தால் அந்த நபரைப் போலீசார் குண்டா் சட்டத்தில் கைது செய்திருப்பார்கள். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின், தேசிய செயலாளர் என்பதால் எச்.ராஜா மீதான வழக்கை விசாரிக்கப் போலீசார் தயங்குகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, 2 மாதங்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிந்து விட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இவ்வழக்கில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் காலதாமதம் ஆகிறது என்றார்.
இதையடுத்து, எச்.ராஜா மீதான வழக்கு விசாரணையை முடித்து 2 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.