இயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
Recommended Video
மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. இதனால் அவரது ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று தரக்குறைவாக பா ரஞ்சித் விமர்சித்திருந்தார்.
கட்டிடக்கலையால் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ராஜ ராஜ சோழனை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்றும் கடுமையாக பேசினார் ரஞ்சித். ஒரு கட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் கூறினார்.
இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரஞ்சித் மீது போலீஸில் புகார் அளித்தனர். முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்குநர் ரஞ்சித் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு இயக்குநர் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு செய்யப்பட்டது.
அப்போது பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது என எச்சரித்தனர். அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கீழமை நீதிமன்றத்தை காவல் துறை அணுகி முன்ஜாமீனை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.