சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு
மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்களுக்கு மத்தியில் சாட்சி அளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பையும் வேலைக்கான சம்பளத்தையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சித்ரவதை கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று முதல் விசாரணையை தொடங்கியது.
இருவரும் அடித்து கொல்லப்பட்டதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையை தொடர்ந்து செல்போன் கடை, சாத்தான்குளம் போலீஸ் நிலையம், கோவில்பட்டி மருத்துவமனை, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் என பல தரப்பில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து நேற்று எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரகுகணேஷ் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹேமாவின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில்.. 2 காவலர்கள் அப்ரூவராவதாக தகவல்
இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் சம்பவம் குறித்து நேரில் சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான ஊதியத்தையும் வழங்கக் கோரியும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் எந்த நேரத்திலும் அவருக்கு உயரதிகாரிகளால் ஆபத்து நேரிடலாம் என்றும் அவரது கணவர் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, தடயங்கள் அழித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.