சாத்தான்குளம்: இனி ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது.. தடயங்களை அழிக்கக் கூடும்.. நீதிபதிகள் காட்டம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவத்தில் இனி ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது. சிபிஐ விசாரிக்கும் முன் தடயங்கள் அழிக்க வாய்ப்புள்ளது என சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் நேரத்தை விட கூடுதலாக கடைத் திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் மீது சொல்லப்படும் புகாராக இருக்கிறது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சாத்தான்குளம்.. ஜெ. வழக்கு போல வெளி மாநில அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.. சுதா ராமலிங்கம்
அவமதிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவரை ஒருமையில் விமர்சித்ததாக புகார் அளித்திருந்தார். இதன் பேரில் காவலர் மகாராஜன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காயங்கள்
இந்த வழக்கு விசாரணைக்கு மேற்கண்ட மூவரும் ஆஜரானார்கள். அப்போது முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நீதித்துறை நடுவரின் அறிக்கை ஆகியவற்றை படித்து நீதிபதிகள் பார்த்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடல்களில் அதிக காயங்கள் உள்ளன. இதனால் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.
தடயங்கள்
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள். இனி ஒரு நொடியும் வீணாக்கக்கூடாது. சிபிஐ விசாரணை தொடங்கும் தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி உடனே விசாரிக்க முடியுமா. இதுகுறித்து 12 மணிக்கு பதிலளிக்க வேண்டும். சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.
காலஅவகாசம்
ஒரு மாஜிஸ்திரேட்டை போலீஸார் ஒருமையில் விமர்சித்தது அதிர்ச்சியை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், போலீஸாரின் செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் ஏஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி குமாரும், டிஎஸ்பி பிரதாபனும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.