கஜா புயல் பாதிப்பு.. மாவட்ட வாரியாக அறிக்கை தேவை.. ஹைகோர்ட் கிளை அதிரடி
Recommended Video
மதுரை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
புயல் பாதிப்பு தொடர்பாக நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இந்நிலையில் புயல் நிவாரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கறிஞர் ஒருவர் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், உயிரிழப்புக்கு ரூ.25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கஜா புயல் தொடர்பாக மத்திய அரசிடம் நிதி உள்பட தமிழக அரசு கோரிய உதவி தகவல் அடங்கிய நகலை நவம்பர் 26-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.