சர்ச்சைப் பேச்சு விவகாரம்.. கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட் கிளை!
மதுரை: இந்து தீவிரவாதி என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன ஜாமீன் வழங்கியுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.
கமலின் இந்த பேச்சு நாடுமுழுவதும் சர்ச்சையானது. கமலுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தினர். கமலின் கருத்துக்கு அரசியல் தலைவர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.
கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர்
கமல் மீது வழக்குப்பதிவு
இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கமல் முறையீடு
இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஹைகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஹைகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.
முன்ஜாமீன் கேட்டு மனு
இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இருநபர் உத்தரவாதம்
அரவக்குச்சி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் ஆஜராகி கமல் நிபந்தனை முன்ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம். 10000 ரூபாய் பிணைத்தொகையை செலுத்தி இருநபர் உத்தரவாதத்துடன் கமல் முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.