மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தர். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற அவர் வேண்டிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைக்க மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை சென்றிருந்தார். மதுரை பிரபல அரசு மருத்துவமனையான ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை இன்று காலை 11 மணி அளவில் அவர் தொடக்கி வைத்தார்.
முன்னதாக இன்று காலை, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வெற்றிக்காக அவர் மீனாட்சி அம்மனிடம் வேண்டிக்கொண்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர். சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் கோவில் வாசலில் தன்னை காண காத்திருந்த மக்களுக்கு கையசைத்தும் வணக்கம் தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.
கோவிலுக்கு வந்த முதல்வருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.
கடந்த மாதம் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர்
ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து வேண்டிக்கொண்டார். இன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.